தினம் தினம் புது பிரச்சனை… இன்று மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் ; சர்க்கஸ் அரசின் பொம்மை முதலமைச்சர்… இபிஎஸ் பாய்ச்சல்..!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 1:32 pm
Quick Share

சென்னை ; மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில், திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கு நாட்களாக, மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதனிடையே, பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாததைக் கண்டித்து சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது :- தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர்,

அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால், இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் , இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 254

0

0