செவி சாய்க்காத விடியா அரசு.. கடும் கோபத்தில் விவசாயிகள் ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வைத்த கோரிக்கை…!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 12:41 pm

பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறும் விண்ணப்பங்களை உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகள் தவித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து, விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும், விடியா திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில், இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, உடனடியாக விடியா அரசின் முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…