கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி… திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் ; இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
15 May 2023, 12:13 pm
Quick Share

திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கல். நாளை நேரடியாகச் சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன். தமிழகத்தில் திறமையற்ற முதலமைச்சர் இருக்கிறார். அதேபோன்று காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்து உள்ளது. உடனடியாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

திமுக அரசு மக்களின் நலனின் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. பலமுறை சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் போலி மதுபானத்தை தடை செய்ய வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை செவி சாய்க்காத அரசுதான் இந்த அரசு.

நாமக்கல் மாவட்டம் ஜோடார்பாளையத்தில் தனியார் ஆலையில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இரவு நேரத்தில் அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போன்று தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த திமுக அரசு விடியாக அரசு திறமையற்ற முதலமைச்சர், திறமையற்ற அமைச்சர்கள் இருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்தார். இது தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு கலந்து கொள்ள சென்றார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி, முன்னாள் அதிமுக கொறடா மனோகரன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

Views: - 275

0

0