பாஜகவில் இணையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை..!
25 August 2020, 9:31 amகர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி எனப் பெயரெடுத்த திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சில மாதங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்சார்பு விவசாயம், ரஜினி ஆதரவு குறித்து பேசி வந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் ரஜினிகாந்தின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை இருப்பார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :- தேசப் பாதுகாப்பு, நாட்டு நலன் உள்ளிட்ட காரணங்களால் தான், நான் ஐபிஎஸ் பதவியை ஏற்றேன். அதே போன்ற ஒரு மாற்றுப்பாதை தற்போது தமிழகத்தின் தேவையாக உள்ளது. இந்த மாற்றுப்பாதையை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என்று நம்புகிறேன். இதன் காரணமாகவே பாஜகவில் இணைய உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினி காந்தின் ஆன்மீக அரசியல், மோடி ஆதரவு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து சமீக காலமாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பேசி வந்த நிலையில், அவர் ரஜினிகாந்த் கட்சியில் இணைவாரா அல்லது பாஜகவில் ஐக்கியமாவாரா என அனைவராலும் விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது பாஜகவில் இணைவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மேலும், “ரஜினிகாந்த் கட்சியில் சேராதது ஏன் என்ற கேள்வி தற்போது அனைவரின் மனதிலும் எழுவது இயல்பான ஒன்றே. அது குறித்து எனது விரிவான அறிக்கையில் தெரிவிப்பேன்.” எனக் கூறியுள்ளார்.