ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவங்க நாங்க… விவாதம் நடத்த நான் தயார் ; அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு விஜயபாஸ்கர் சவால்..!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 11:40 am
Quick Share

அண்ணா திமுக கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மதுரையில் நடக்கும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறியதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாநாடு திருப்பு முனையாக அமையும். இந்த மாநாடு வெற்றி பெற உள்ளதை உளவுத்துறை மூலம் அறிந்த தமிழக அரசு பயத்தில் அதே தேதியில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடத்தை தவிர்த்து, தேர்தல் வாக்குறுதி சொல்வது போன்று நடந்து கொள்ள வேண்டும்.

திமுக நடத்தும் உண்ணாவிரதத்தை தாண்டி மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லாத் தடைகளையும் தாண்டி அண்ணா திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை விவாதத்துக்கு அழைக்கிறார். விவாதிக்க நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன். நல்ல நாளில் தான், நல்ல நிகழ்ச்சி நடைபெறும்.

ஆன்மீகத்தில் நாங்கள் நம்பிக்கை உடையவர்கள். அவர்கள் வேண்டுமானால் அஷ்டமி நவமியில் வைத்துக் கொள்ளட்டும். அதிமுக ஒரு கடல் அலை சின்னத்திரை கொண்டு கடல் அலையை தடுத்து நிறுத்த முடியாது. எல்லா தடைகளையும் தாண்டி மதுரைக்கு தொண்டர்கள் செல்வார்கள்.

புதுக்கோட்டை மன்னர் அவர்கள் தனது அரண்மனையை ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 ஏக்கர் பரப்பளவில் ஒப்படைத்தார். அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இரண்டு ஏக்கர் அளிப்பதற்கு இந்த அரசுக்கு மனமில்லை. மன்னர் குடும்பத்தினர் விரும்புகின்ற இடத்தை இந்த அரசு வழங்க வேண்டும். அண்ணா திமுக கழகம் எந்த காலத்திலும் யாருக்கும் பயந்து கிடையாது.

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட கொடுமையின் போது சாட்சியாக இருந்த திருநாவுக்கரசர், தற்போது பிறழ் சாட்சியாக பதவிக்காக மாறி உள்ளது கண்டனத்திற்குரியது. வரலாறு என்றைக்கும் மாறாது. காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறலாம், ஆனால் வரலாறு எப்போதும் மாறாது. நடந்தவைகள் இந்த வரலாறு ஒருபோதும் யாரும் மாற்ற முடியாது.

சட்டமன்றத்தில் அன்றைய தினம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஏற்பட்டது கருப்பு தினமாக அண்ணா திமுக தொண்டர்கள் நினைத்து வருகிறார்கள். சட்டமன்றத்தில் நடைபெற்ற அன்றைய தினம் நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்தார். இன்று திருநாவுக்கரசர் பிர்ழ் சாட்சியாக மாறியுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 304

0

0