கிளுகிளுப்பு காட்டி மக்களை ஏமாற்ற முடியாது… கருணாநிதியை போல உரிமையை தாரை வார்க்கும் வாரிசு ; ஜெயக்குமார் விமர்சனம்

Author: Babu Lakshmanan
17 February 2024, 4:31 pm
Quick Share

திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் குடும்பம் தான் வளம் பெறுகிறது, தொண்டர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ராயபுரம் பகுதி அதிமுகவினர் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டமும், சிறப்பாக செயலாற்றிய நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதிமுக அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது :- வரும் 24 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நதி நீர் உரிமை பொறுத்தவரை அதை பேணி காத்து ஜீவாதார உரிமைகளை பெற்று தந்த இயக்கம் அதிமுக மட்டும் தான். 205 டிஎம்சி தண்ணீர் நம் உரிமை, திமுகவின் தலைவர் கருணாநிதி அன்று ஆட்சியில் இருந்தபோது சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து காவிரி நீர் உரிமையை தாரைவார்த்து கொடுத்தார்.

தஞ்சை விவசாயிகள் உச்சநீதிமன்றம் செல்ல விடாமல் தடுத்து காவிரிக்கு பெருத்த துரோகம் செய்தவர் கருணாநிதி மற்றும் திமுக அரசு. அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி இருந்தால் நிச்சயம் தண்ணீர் கிடைத்திருக்கும். முழுக்க முழுக்க சுயநலத்திற்காக இந்திரா காந்தி அம்மையார் சர்க்காரியா கமிஷன் மூலம் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளி விடுவார் என்ற காரணத்திற்காக காவிரி நதி நீர் உரிமையை விட்டுவிட்டார்கள்.

38 பாராளுமன்ற உறுப்பினர்கள் 28 நாட்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து நம் உரிமையை அன்று அதிமுகவினர் நிலைநாட்டினோம். மேகதாது அணை குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் அந்த மாநில முதலமைச்சர் மேகதாது அணை கட்டுவோம் என்று சொன்ன பிறகும், இன்றும் திமுகவினர் வாய்மூடி மௌனியாக உள்ளனர், கருணாநிதி எப்படி உரிமையை விட்டாரோ அவரது வாரிசு அதேபோல் செய்கிறது.

இண்டியா கூட்டணியில் உள்ள ஸ்டாலின் அந்த கூட்டணியில் பங்குபெற, எங்கள் ஜீவதார உரிமையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் கூட்டணியில் இருப்போம் என்று ஒரு கண்டிசன் போட்டு இருக்க வேண்டும். அதற்கு திராணி இருக்கிறதா திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, இல்லை. ஒரு முறை கூட வாய் திறந்து கர்நாடகா எங்களை வஞ்சிக்கிறது என்று சொல்லவில்லை. எங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

சுயநலமாக உள்ள திமுக அரசு இன்றும் விவசாயிகளையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கிறது. மேகதாது அணையை கட்டினால் தமிழ்நாடே பாலைவனம் ஆகிவிடும். அந்த அணையை கட்டக்கூடாது என்று கடுமையாக அதிமுக எதிர்க்கிறது.

ஓபிஎஸ் தான் திமுகவுக்கு ஊதுகுழல், பி டீம். சட்டமன்றத்தில் பேசியதை புரியாமல் சொல்கிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஓட்டு மிஷின்கள் தயாரிக்க வேண்டும். அதை எப்படி செய்வீர்கள்? உள்ளிட்ட பத்து கேள்விகளை கேட்டுள்ளோம். யாரால் தமிழ்நாட்டில் உரிமை போனது, யாரால் தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு அடமானம் வைத்தோம்?.

17 ஆண்டுகள் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை அடமானம் வைத்துவிட்டு, இப்பொழுது வந்து உரிமை மீட்பு மாநாட்டை நடத்துகிறார்கள். மத்தியில் 17 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பு இருந்தும், கச்சத்தீவு, காவிரி பிரச்சனை என எதற்குமே நடவடிக்கை எடுக்கவில்லை. பழைய காலத்தில் கிளு கிளுப்பு காட்டி ஏமாற்றியது போல் ஏமாற்ற முடியாது. மாநில உரிமை மீட்பு மாநாடு மக்களை ஏமாற்றும் செயல், எள்ளி நகையாடும் செயலாக உள்ளது.

கிளாம்பாக்கத்தில் கழிவறையில் தண்ணீர் வராது, குடிநீர் இருக்கும் டம்ளர் செயினில் கட்டி இருக்கும் தண்ணீர் குடிக்க முடியாது, அம்மா உணவகம், மினி கிளினிக் திறங்கள். போதிய பேருந்து விடாமல் மக்களை காயப்படுத்தி வருகிறார்கள்.
அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர் அப்பா பெயரை வைத்து சிலையை வைத்தால் போதுமா உருப்படுமா பேருந்து நிலையம்? உருப்படாது.

திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் குடும்பம் தான் வளம் பெறுகிறது. தொண்டர்கள் மிக கஷ்டப்பட்டு உள்ளனர். அந்த புரட்சியால் திமுக தொண்டர்கள் முழுவதும் அதிமுகவுக்கு தான் பணி செய்வார்கள். தேர்தல் பத்திரம் திமுக 600 கோடி ரூபாய் வாங்கியது கூட தெரியாத முதலமைச்சர் அதை வரவேற்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை , தெரியவும் இல்லை.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசி அவர்களுக்கு, உரிய சலுகைகளை இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பேருக்கு பணி தருவதாக காதல் பூ சுற்றுகிறார். தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார்கள்.2011 இல் இருந்து 2021 வரை நான் அதில் அமைச்சராக இருந்த போது மூன்றரை லட்சம் பேருக்கு பணி வழங்கினோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்குவோம் என்று நாங்கள் பொய் சொல்லி ஏமாற்றி விட்டோம் என்று மக்களிடம் சொல்லுங்கள், என்றார்.

Views: - 221

0

0