சாப்பிடும் தட்டில் கைகழுவலாமா..? விவசாயிகளை அவமானப்படுத்தி விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் : ஜெயக்குமார் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
15 September 2022, 2:33 pm
Quick Share

சென்னை : காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆரம்பித்த முதல்வரே, அதை அவமானம் படுத்தியுள்ளார் என்றும், பெயர் சூட்டுவதில் மட்டுமே திமுக அரசு பிரம்மாண்டம் காட்டுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான். மீனவர்கள் இனத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் திமுக அரசு இதுக்குறித்து எதையும் செய்யவில்லை.

அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் திமுக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், காலை சிற்றுண்டி திட்டம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- பெயர் சூட்டுவதில் மட்டுமே பிரம்மாண்டம் காட்டுகிறது திமுக அரசு என கூறிய அவர், காலை சிற்றுண்டித்திட்டத்தை ஆரம்பித்த முதல்வரே அதை அவமானம் படுத்தியுள்ளார் என்றும், திட்டத்தை தொடங்கி வைத்து அதில் கைகழுவுவது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் எனவும் கூறினார்.

திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை எதையுமே நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், பெண்களுக்கு உரிமைத்தொகை, நீட் தேர்வு மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் வாங்க திமுகவிற்கு வக்கு இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.

ஓ.பி.எஸ் – பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஜெயலலிதாவாக என்னை பார்கிறார்கள் என சசிகலா கூறியதற்கு, சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்லி வருகிறார் என்றும், அவருக்கு sense of humour அதிகம் எனவும் குறிப்பிட்டார்.

அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் இல்லாத நிலை நிலவி வருவதாக கூறிய அவர், அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Views: - 421

0

0