திமுக ஆட்சி மீது நம்பிக்கை இருந்தால் தனித்துப் போட்டியிட முடியுமா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்!!

Author: Babu Lakshmanan
18 December 2023, 4:37 pm
Quick Share

மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருந்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருநெல்வேலி மக்களுக்காக அரிசி, சேலை, கைலி, போர்வை, துண்டு, பாய், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது :- மழை, வெள்ள பாதிப்புகளுக்கு அரசுத்துறை அதிகாரிகள் பலிகடாக ஆக்கப்படுகிறார்கள். தென் மாவட்டங்களில் 4 மாவட்ட மழை, வெள்ளப் பணிகளில் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். பிற அமைச்சர்கள் திமுக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல மழை வெள்ளத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து போதுமானது அல்ல, மக்கள் பாராட்ட வேண்டும். கன மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

தமிழகம் முழுவதும் மழை வெள்ளமாக நிகழக்கூடிய நேரத்தில் திமுக மாநாடு நடத்த வேண்டுமா?, திமுக மாநாடு நடத்தி என்ன செய்யப் போகிறார்கள், திமுக அரசு நிர்வாக திறனற்ற அரசாக, விளம்பர அரசாக செயல்படுகிறது. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக என்ன செய்தது?, எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வருகிறோம்.

2015ல் நிகழ்ந்த மழை வெள்ளத்தில் மக்களுக்கு நிறைய நிவாரணப் பணிகள் செய்ததால் தான் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருந்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா?, என கூறினார்.

Views: - 298

0

0