குடியரசு முன்னாள் தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை : தொடர்ந்து கவலைக்கிடம்..!
28 August 2020, 5:54 pmகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவருக்கு, வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நாள்தொறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.