காமராஜர் ஆத்மா அவர்களை மன்னிக்காது… யாரையும் நம்பி நாங்க கிடையாது ; செல்வப்பெருந்தகைக்கு ஜிகே வாசன் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 2:18 pm
Quick Share

அகில இந்திய காங்கிரஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை பெருந்தலைவர் காமராஜரின் ஆத்மா மன்னிக்காது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் விருப்ப மனு வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு 4,5,6 ஆகிய தேதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் விருப்ப விண்ணப்பத்தை தலைமை அலுவலகத்திலிருந்து கொடுத்து வருகிறோம். நாளை மறுதினம் தேர்தல் குழுவை அறிவிக்க இருக்கிறேன். ஐந்து நபர் கொண்ட குழுவாக இது இருக்கும். விண்ணப்பங்கள் இந்த குழுவிடம் பெறப்பட்டு. அதன் பிறகு வேட்பாளர் யார் என பரிசீலித்து முடிவு செய்யப்படும், எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், போதைப் பொருட்களுக்கு எதிராக செய்திகளை பார்ப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. போதைப் பொருட்களில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் மாறிவிடுமோ என்ற பயம் பெற்றோர்கள் மத்தியிலே ஏற்படுத்துகிறது. அரசு பாரபட்சம் இன்றி செயலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோன்று செயலில் ஈடுபடுபவர்களை அரசு தண்டிக்க வேண்டும். போதை பொருள் தீவிரவாதம் பயங்கரவாதத்துக்கு எல்லாம் ஜாதி, மொழி, மதம் என்று எதுவும் கிடையாது. தனிநபரின் தவறான எண்ணங்கள், செயல்கள் தான் காரணம், எனக் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜிகே வாசன் பாஜகவில் இணைந்து ஆள் பிடிக்கின்றார் எனக் கூறுகிறாரே..? இது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியை பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு பேசுவதற்கு எதுவும் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விண்ணிலிருந்து பார்த்து கொண்டு இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் ஆத்மா மன்னிக்காது.

யாரையும் நம்பி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கிடையாது. யாரையும் வாக்குக்காக இழுக்க வேண்டும், அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கிடையாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் எந்தெந்த பகுதியில் வலிமையாக இருக்கிறதோ, அந்தந்த பகுதியில் மக்கள் சந்திப்பை அதிகரித்து, அதிக வாக்குகள் பெறுவது தான் எங்களின் பணியாக இருக்கும்.

மேலும், பிரதமர் யார் என்று எங்களால் தைரியமாக கூற முடியும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் வெல்லப் போகிறார் என்று எங்களால் உறுதியாக சொல்ல முடியும், என கூறினார்.

Views: - 127

0

0