இந்தி தெரியாதுன்னு சொன்னேன்… அவமானப்படுத்திட்டாங்க : விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டாரா நடிகர் சித்தார்த்?

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 11:39 am
Siddharth - Updatenews360
Quick Share

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதையடுத்து மணிரத்னத்தின் ஆயுத எழுத்து, படத்தில் நடித்த சித்தார்த்துக்கு பின்னர் தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு பேமஸ் ஆன நடிகராக வலம் வந்தார்.

இதையடுத்து 2011-ம் ஆண்டு வெளிவந்த 180 படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தபின், தொடர்ந்து தமிழ்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். ரீ-எண்ட்ரிக்கு பின் அவர் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், உதயம் என்.ஹெச்.4 போன்ற படங்களில் நடித்து வெற்றிகண்டார்.

இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வரும் சித்தார்த், தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேலை விஷயமாக மதுரைக்கு விமானத்தில் சென்ற நடிகர் சித்தார்த், அங்குள்ள சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் தானும், தனது பெற்றோரும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார்.

ஆளே இல்லாமல் காலியாக இருந்த ஏர்போர்ட்டில் அவர்கள் தனது பெற்றோரின் பையில் இருந்து சில்லறைகளையெல்லாம் எடுக்க சொன்னதாகவும், அப்போது அவர்களிடம் தான் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து தங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததாக பதிவிட்டுள்ளார் சித்தார்த்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்தியா இப்படித்தான் இருக்கும் எனக்கூறி அவர்கள் தங்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார் சித்தார்த். மேலும் வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகின்றனர் என்றும் தனது பதிவில் அவர் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

Views: - 372

0

0