இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 4:10 pm
CM Stalin - Updatenews360
Quick Share

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா. ராசேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் ரெண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை. ராசேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.

நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 பாராளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.

ஆகவே, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும்.

நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, “நாற்பதும் நமதே நாடும் நமதே” என்ற முழக்கத்துடன் விடைபெறுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Views: - 181

0

0