போட்ட திட்டமே வேற… கள்ளச்சாராய உயிரிழப்புகளில் மிகப்பெரிய அரசியல் சதி ; திமுக அரசு மீது கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 11:11 am
Quick Share

பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்பொழுது வரை 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 48 நபர்கள் விழுப்புரம் உண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல் தெரிவித்து, இதன் பின்னர் செய்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:- விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எக்கியார் குப்பத்தில் மது விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. காவல்துறையினரின் அனுமதியோடு அரசியல் தொடர்பில் இருப்பவர்கள் இந்த மதுவிற்பனைகள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒரு பக்கம் டாஸ்மாக் மது மூலம் விற்பனை, மறுபக்கம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி ஆதரவுடன் ஆளுங்கட்சி துணையோடு சந்து பொந்துகளில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

22 பேர் உயிரிழப்பிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். திமுக பிரச்சாரத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து போடுவேன் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்பொழுது வரை அது குறித்து எதுவும் பேசாமல் தமிழ்நாட்டு வரலாற்றில் 50 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு 22 பேர் உயிரிழந்த சம்பவம் இதுதான். டாஸ்மார்க்கை படிப்படியாக குறைப்போம் என சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் டாஸ்மார்க் கடைகளை படிப்படியாக உயர்த்தி உள்ளனர்.

மது விற்பனையை விஸ்திகரிப்பு செய்ய இலக்கு நிர்ணயத்திருப்பதை என்னவென்று சொல்வது, இந்தத் துறை அமைச்சர் எங்கே ஓடி ஒளிந்து கொண்டுள்ளார் என்பது தான் கேள்வி. மக்களின் உயிரை பாதுகாப்பதை தவறிவிட்ட அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லாத அரசு இந்த அரசு. தமிழக முதலமைச்சரும், செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்.

தமிழகத்தில் 500த்திற்கும் மேற்பட்ட பார்கள் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர், இந்த மாவட்ட அமைச்சர் ஆகியோர் மூன்று நபர்கள் மீதும் கொலை (302 )வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் சாராயம் குடித்து தமிழக பெண்கள் விதவையாகியுள்ளனர் என டுவிட் போட்ட கனிமொழி எம்பி அவர்கள், ஏன் இப்பொழுது டுவிட் போடவில்லை. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நேரில் வந்து கூட பார்க்கவில்லை.

செய்த குற்றத்தை மறைப்பதற்காக இவர்களுக்கு இழப்பீடு தொகையாக 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தார் தப்பு செய்கின்றனர். காவல்துறையை இடம் மாற்றினால் இந்த பிரச்சனை தீராது ஆட்சியாளர்களை தான் மாற்ற வேண்டும். ஆட்சியாளர்களிடம் தான் குற்றம் இருக்கிறது. சாராயத்தை ஒழிப்பேன் எனக் கூறி ஓட்டு வாங்கியவர்கள் திமுகவினர் தான் மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், இந்த ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டியது தான்.

மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் ஏதோ சதி இருக்கிறது. சாராயத்தில் மெத்தனாலை கலந்தது யார்..? இதில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது. இதனை கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இந்த கள்ளச்சாராயம் இறப்பு சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது. இதனை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும், என வலியுறுத்தினார்.

Views: - 291

0

0