காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு.. ஒரே தேர்வு மையத்தில் நடந்த அதிர்ச்சி : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 9:11 pm
CM - Udpatenews360
Quick Share

ஒரே தேர்வு மையத்தில் அதிகத் தேர்ச்சி பெறும் வழக்கமான அரசுத் தேர்வு முறைகேடுகள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் வந்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது X தளத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர் பணிகளில், 20% பணியிடங்களான 123 பணியிடங்கள், காவல்துறையில் பணிபுரிபவர்களுக்காக ஒதுக்கப்பட்டு, அதற்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றிருந்தது.

காவல்துறையில் பணியாற்றும் சுமார் 7000 சகோதர சகோதரிகள் இந்தத் தேர்வில் பங்கேற்று, தேர்வு முடிவுகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. அடுத்தடுத்த தேர்வு எண் உடையவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பதாக, தேர்வு எழுதிய காவல்துறை சகோதரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒரே தேர்வு மையத்தில் அதிகத் தேர்ச்சி பெறும் வழக்கமான அரசுத் தேர்வு முறைகேடுகள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் வந்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

உடனடியாக, இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியுடைய காவல்துறை சகோதரர்கள் மட்டுமே உதவி ஆய்வாளர் பணிகளில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக, தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 247

0

0