வெறும் வாய்ப்பந்தல் அறிக்கை… அரசு மருத்துவமனையில் காகித கப் : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 9:24 pm
EPS - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்”பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியானது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்” பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியிட்டு விடியா திமுக-வின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இன்றைய நாளிதழ்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களை கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உயிர் காக்கும் பிராண வாயு உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைவின்றி கிடைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விஷ காய்ச்சல், சிக்கன் குன்யா, டெங்கு போன்றவை பரவி மக்கள் அவதிப்படுவதால், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்ற எனது யோசனையை ஏற்காமல் சுகாதாரத்துறை அமைச்சர் மழுப்பலான அறிக்கை ஒன்றை வெளியிட்டார், தமிழக மக்கள் உடல் நலன் காப்பதில் அரசியல் செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்து விடாமல் ,அடிப்படை தேவையான இந்த சிறப்பு முகாம்களையும் உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட இந்த விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 258

0

0