ரோடு போடாமலே ரூ.3.5 கோடி ஊழல்..? அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரிலேயே அதிர்ச்சி.. அதிமுகவின் நெருக்கடியால் 4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்.. !!

Author: Babu Lakshmanan
12 April 2022, 11:23 am
Quick Share

கரூரில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3.5 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின் பேரில், பொறியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் வால்காட்டு புதூர், காக்காவாடி பிரிவு, நன்னியூர் புதூர், மண்மங்களம், செம்படாபாளையம், புகழூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே போடப்பட்டு நல்ல நிலையில் உள்ள சாலைகளை புதிதாக போடப்பட்டதாக கூறி 3.5 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகுந்த ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஆனால், இந்த தகவலை அறிந்த தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் அவசரம், அவசரமாக அப்பகுதிகளில் சாலைகளை போடும் பணியில் ஈடுபட்டனர். அது குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதிமுக சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சென்னையிலிருந்து வந்த நெடுஞ்சாலை துறை குழுவினர் இப்பகுதிகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபால் சிங், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.

அதற்கான ஆணைகளை திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி நேற்று இரவு வழங்கியுள்ளார்.

Senthil Balaji - updatenews360

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் சாலை போடாமலேயே ரூ.3.5 கோடி ஊழல் செய்திருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 957

0

0