எல்லை மீறும் ஆளுநர் ஆர்என் ரவி… ஆலகால விஷத்தைக் கக்கிவிட்டார் ; நாகலாந்தில் நடந்தது தமிழ்நாட்டிலும் நடக்கும் ; எச்சரிக்கும் வைகோ..!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 10:18 am
Quick Share

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உதகையில் துணைவேந்தர்களின் மாநாடு நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது :- நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழில் அதிபர்களுடன் கேட்பதாலோ முதலீடுகள் வந்து விடாது. உலகளாவிய தொழில் முதலீடுகளை ஏற்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமற்ற மனித ஆற்றலை உருவாக்க வேண்டும்.

முதலில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதம் இந்திய மொழிகளை சார்ந்த துறைகளில் மட்டுமே கிடைக்கிறது. எனவே, புதிய கல்விக் கொள்கையை தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும், எனக் கூறினார்.

அண்மையில், முதலீடுகளை கவரவும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழிலதிபர்களை அழைப்பு விடுக்கவும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று இருந்தார். இந்த நிலையில், அவரது இந்தப் பயணத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக ஆளுநர் ஆர்என் ரவி இந்தக் கருத்தை கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவியின் இந்தப் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார், இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருகிறது.

நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்.” என்று பேசியுள்ளார். சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப் படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும், எனக் கூறினார்.

Views: - 273

0

0