சும்மா இல்ல 20 ஆயிரம் கோடி…. அந்த 3 துறைகளை கண்போல பாதுகாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ; அமைச்சர் எவ வேலு பரபர பேச்சு…!!

Author: Babu Lakshmanan
10 November 2023, 1:09 pm
Quick Share

திருவண்ணாமலை ; கல்வி துறை, மருத்துவ துறை மற்றும் கட்டுமான துறை ஆகிய 3 துறைகளை தனது கண் போல் முதலமைச்சர் பாதுகாக்கின்றார் என்று பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் தனியார் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாணவர்களுடன் இணைந்து கையெழுத்து இயக்கத்தில் இணைந்து தமிழகத்தில் இருந்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்தியா என்ற பெரும் நாட்டில் 28க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை விரட்டியடிக்க வேண்டும் என்று ஏன் கேட்கின்றார் என்றும், இந்தியாவிலேயே தமிழகம் தான் விழிப்புணர்வு கொண்ட மாநிலம் என்றும், நாம் அனைவருக்கும் அடையாளம் திராவிட இயக்கம் தான் என்றும் கூறினார்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வி துறை, மருத்துவ துறை மற்றும் கட்டுமான துறை ஆகிய மூன்று துறையை தனது கண் போல் பாவித்து வருவதாகவும், அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியில் இதுவரையில் கல்வி துறைக்கு நிதி ஓதுக்காத அளவிற்கு இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஓதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இவ்வளவு பணம் செலவு செய்யப்படுகின்றதே, அந்த படிப்பிற்கு மதிப்பில்லையா என்றும், நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பதாகவும், குறிப்பாக 12ம் வகுப்பு வரை படித்த படிப்பை ஏற்காமல் பயிற்சி வகுப்பில் படித்தால் தான் தேர்ச்சி பெற முடியுமா..? என்று கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் எவ்வாறு பல்வேறு இடங்களில் உள்ள பயிற்சி மையங்களில் சென்று படிப்பை தொடர முடியும் எனவும், அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தான் நீட் விலக்கு நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கத்தை கல்லூரிகளில் நடத்துவதாகவும், இதனால் கல்லூரி மாணவர்களின் சகோதரர்கள், சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் நீட் விலக்கு ஏற்பட்டு மருத்துவ படிப்பில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

Views: - 205

0

0