‘தக்காளி ரூ.100க்கு விற்றாலும்… அதான் ரூ.1000 தரோம்-ல.. போய், மோடி கிட்ட கேளு’… அமைச்சர் பொன்முடி பேச்சால் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 2:39 pm
Quick Share

ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் முகாமில் பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பதிலால் சலசலப்பு ஏற்பட்டது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றான ரூ.1000 உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் விநியோகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டம் வாயிலாக, ஒரு கோடி பேருக்கு உதவித்தொகை வழங்க, 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தில், பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம், ரேஷன் ஊழியர்கள் வாயிலாக நடந்து வந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுதும், 35,923 இடங்களில் முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முகாம்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனால், கடுப்பான அமைச்சர் பொன்முடி, “தக்காளி விலை ரூ.100 அதிகரிச்சாலும், ரூ.1000 தரோம்-ல. விலை எல்லாம் ரூ.2, ரூ.3 ஏறும், குறையும். தக்காளி விலை உயர்ந்தால் மோடி கிட்ட போய் கேளு,” எனக் கூறினார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

Views: - 268

0

0