நீதிமன்ற காவலில் இருக்கும் போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா..? செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி!!

Author: Babu Lakshmanan
11 July 2023, 12:10 pm
Quick Share

காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்..? செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளையில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இந்த வழக்கை விசாரித்தார்.

இந்த நிலையில், வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராவதற்கு ஏதுவாக வழக்கை, 11ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டதால், விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று தொடங்கியது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபில், “அதிகாரிகளுக்கு காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கவில்லை. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை பொறுத்தவரை, அமலாக்கத்துறை புலனாய்வை மேற்கொள்கிறது.

புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குநகரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை,” என்று வாதாடினார்.

இதனைக் கேட்ட நீதிபதி சி.வி. கார்த்திகேயன், குற்றம்புரிந்திரிக்கிறார் என் நம்புவதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இருந்தால் அமலாக்கத்துறையினர் கைது செய்யலாம் என்றும், காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்..? என்றும், நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா..? எனக் கேள்வி எழுப்பினார்.

Views: - 270

0

0