ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியதில் முறைகேடா..? அமைச்சர் காந்தி விளக்கம்!!

Author: Babu Lakshmanan
21 January 2022, 8:28 pm

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளில் முறைகேடு நடந்ததா..? என்பது குறித்து அமைச்சர் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலக கூட்ட அரங்கில் தமிழகத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் அறிவிப்புகள், மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி பேசியதாவது :- பஞ்சு மற்றும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கைத்தறி மற்றும் நெசவாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, இதன் விலையை குறைக்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை நீக்கவேண்டும் என முதலமைச்சர் ஏற்கனவே கடிதம் எழுதியும், தற்போது வரை அதற்கு ஒன்றிய அரசு சார்பாக எந்த ஒரு பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது.

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வுக்கு ஒரே காரணம் ஒன்றிய அரசு தான். இதில், தமிழக அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதால் கைத்தறி மற்றும் நெசவாளர் சங்கத்தினர் கூறிய கருத்துக்கள் குறித்தும் முதல்வரிடம் ஆலோசனை செய்த பின் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தது தொடர்பாக முடிவு எடுக்கப்படும், என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தின் பஞ்சு தேவை 110 லட்சம் பெல்களாக உள்ள நிலையில் உற்பத்தி வெறும் 3 முதல் 5 லட்சம் பெல்கள் மட்டுமே உள்ளது. எனவே வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இறக்குமதி வரி 3 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக மாறியுள்ளது. எனவே, விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி சேலைகளில் எந்த வித குளறுபடியும் இல்லை என்றும், தமிழகத்தில் 1கோடியே 90 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான சீருடை வழங்குவதற்கான டெண்டர் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

  • ravi mohan feeling sad that his children used as a tool for financial gain கையெழுத்து போட மட்டும் அப்பா தேவையா? பக்கத்துக்கு பக்கம் ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன்!