2016ஆம் ஆண்டு 29 பேருடன் மாயமான விமானம் : 7 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : எப்படி கிடைத்தது? முழு விபரம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 10:00 pm
Missing
Quick Share

2016ஆம் ஆண்டு 29 பேருடன் மாயமான விமானம் : 7 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : எப்படி கிடைத்தது? முழு விபரம்!

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி காலை 8.30 மணிக்கு விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேரும், விமானப்படை ஊழியர்கள் 11 பேரும், ராணுவ வீரர்கள் 2 பேரும், கடற்படை வீரர் ஒருவரும், கப்பல் மாலுமி ஒருவரும், கப்பல் படை ஊழியர்கள் 8 பேரும் என மொத்தம் 29 பேர் பயணித்தனர்.

விமானத்தை விமானிகள் பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குணால், விமான பொறியாளர் ராஜன் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானப்படையை சேர்ந்த உயர் அதிகாரி தீபிகா, விமானப்படை வீரர் சஞ்சீவ்குமார் மற்றும் 9 பேர் இதில் பயணம் செய்துள்ளனர். ராணுவ என்ஜினீயரிங் சேவை பிரிவில் பணிபுரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விமல் மற்றும் ஒருவர் விமானத்தில் இருந்தனர்.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள பழுதான கப்பல்களை சரிசெய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்திர சிங், மகாரானா, சின்னாராவ், சீனிவாச ராவ் ஆகிய 8 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

இந்த விமானத்தில் கடலோர பாதுகாப்புப்படை வீரர் முத்துகிருஷ்ணன் (வயது 37) என்பவரும் பயணித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் போர்ட்பிளேயர் நகரில் கடலோர பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்தும் விமானம் மாயமானது. சென்னையில் இருந்து கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென மாயமானது.

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அப்போதைய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டார். இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. சென்னையில் இருந்து 145 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அப்பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன. தேடுதல் பணியில் அதிக அளவில் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டநிலையில் நாட்டின் மிகப்பெரிய அளவிலான தேடுதல் பணியாக அது பார்க்கப்பட்டது.

2016 ஜுலை 22ம் தேதி விமானம் மாயமான நிலையில் 2 மாதங்களாக தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும், மாயமான விமானத்தின் நிலை என்ன என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்திவிட்டதாக 2016 செப்டம்பர் 15ம் தேதி இந்த விமானப்படை அறிவித்தது. மேலும், விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததுவிட்டதாக விமானப்படை அறிவித்தது.

2016ம் ஆண்டு மாயமான ஏ.என்.32 ரக சரக்கு விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாயமான விமானம் 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Views: - 267

0

0