திமுக பெண் கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல்… கூட்டத்தை பாதியில் முடித்து வெளியேறிய நெல்லை மேயர் : விஸ்வரூபம் எடுக்கும் திமுக கோஷ்டி பூசல்..!!

Author: Babu Lakshmanan
28 July 2023, 8:36 am
Quick Share

நெல்லை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தலையிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, திமுக மண்டல சேர்மன்கள் மாநகராட்சி கூட்டரங்கில் ஆணையாளர் மற்றும் மேயர் முன்னிலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

நெல்லை மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல், சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 9 உறுப்பினர்கள் தேர்வு செய்ய திமுக சார்பில் ஒன்பது பேர் கொண்ட பட்டியலும் மாவட்ட தலைமையால் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த பட்டியலை எதிர்த்து மேலும் மூன்று திமுக கவுன்சிலர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டனர். ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு 12 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டனர். இதில் திமுக அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட மூன்று பேரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதனை தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பேச தொடங்கிய நிலையில், நெல்லை மாநகராட்சியின் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, மேயர் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளரை குற்றம் சாட்டி பேச தொடங்கினார்.

மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு வேட்பாளர்கள் அறிவிப்பு தொடர்பாக, மேயர் அழைப்பின் பேரில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, தங்களை கொலை மிரட்டல் செய்ததாக குற்றம் சாட்டி, ஆக்ரோஷமாக பேசினார்.

நெல்லை மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டலம், நெல்லை மண்டலம், மேலப்பாளையம் மண்டலம் மற்றும் பாளையங்கோட்டை மண்டலத்தைச் சார்ந்த தலைவர்கள், கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் ஆணையாளர், மேயர், துணை மேயர் முன்னிலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

தொடர்ந்து மாநகராட்சி மேயரை குற்றம் சாட்டி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில், மாநகராட்சி கூட்டத்தை முடித்து வைப்பதாக கூறிவிட்டு, மேயர் எழுந்து சென்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மாநகராட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதுடன், கூட்டரங்கை விட்டு வெளியே செல்ல மாட்டோம் எனக் கூறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி மேயரை எதிர்த்து சொந்தக் கட்சியான திமுக கவுன்சிலர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை நியமித்து திமுக தலைமை அந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்தது. இருந்த போதிலும் மீண்டும் மாநகராட்சி மேயருக்கும், கவுன்சிலருக்கும் இடையேயான பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், தொடர்ந்து கிடப்பில் போடப்படுவதாக பொதுமக்கள் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது.

அதேவேளையில், தென்காசியில் போராட்டத்தின் போது, திமுகவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்று பெண் நிர்வாகியே வெளிப்படையாக கூறிய நிலையில், தற்போது நெல்லையில் திமுக பெண் கவுன்சிலர்களுக்கும் பாதுகாப்பில்லை என்று கூறப்படும் சம்பவம் திமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 268

0

0