ரேசன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்…இனி பாக்கெட்டுகளில் தான் அரிசி: வீடு தேடி வரும் புது ரேசன் கார்டுகள்…அமைச்சர் அறிவிப்பு..!!

Author: Rajesh
8 April 2022, 6:35 pm
Quick Share

சென்னை: ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இனி பாக்கெட்களில் மட்டுமே அரிசி வழங்கப்படும் என்றும், தரமற்ற அரிசு வழங்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு தீர்வு காணவே இந்த முடிவு எனவும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். இதில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்திய அஞ்சல் துறை வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர். உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டு நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் இனிமேல் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். பொதுமக்கள் வரவேற்க தக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் 3 நிலைகளிலும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில், பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டிருக்கிறார்.

Views: - 693

0

0