பல்லடம் கொலை வழக்கு… முக்கிய குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு ; திடீரென ஆக்ஷனில் இறங்கிய போலீசாரால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 8:40 am
Quick Share

திருப்பூர் அருகே 4 பேரை கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி தப்பியோட முயற்சித்த போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி கள்ளகிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மோகன் ராஜ் (49). இவருடைய வீட்டிற்கு செல்லும் வழியில் வெங்கடேஷன், செல்லமுத்து (24), சோனை முத்தையா (20) ஆகிய 3 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை மோகன்ராஜ் கண்டித்த நிலையில், அவரை 3 பேரும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.

இதனை தடுக்க வந்த மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமாரையும் துண்டு துண்டாக வெட்டி கொன்று விட்டு தப்பிச்சென்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நெல்லை, திருச்சி, தேனி ஆகிய பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். இதில், திருச்சியை சேர்ந்த செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கொலையில் தொடர்புடைய வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையாவை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார், சோனை முத்தையா ஆகிய 2 பேரும் நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து, இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை செய்து வந்த நிலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு வெங்கடேஷை போலீசார் அழைத்துச் சென்றபோது, போலீசார் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, நான்கு குண்டுகளில் இரண்டு குண்டுகள் காலில் பாய்ந்தது. இதில் இரண்டு கால்களும் முறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 444

0

0