பேரறிவாளன் நிரபராதி அல்ல… விடுதலையை கொண்டாடும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற தைரியம் உண்டா…? காங்கிரசுக்கு அண்ணாமலை கேள்வி

Author: Babu Lakshmanan
19 May 2022, 4:27 pm
Quick Share

சென்னை : பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது முதல் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொள்ளும் விதம் சந்தேகத்தை கிளப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது :- 1991ம் ஆண்டு மே 21ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டது தமிழக மக்களுக்கு துயரமான நாள். உச்சநீதிமன்றம் பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருந்தாலும், தனது உத்தரவில் அவரை நிரபராதி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிரபராதி விடுவிக்கப்பட்டது போன்று முதலமைச்சர் நடந்து கொள்வதாகவும், அவரது இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுத்தான் அவர் முதலமைச்சராக பதவியேற்றாரா என்ற சந்தேகம் எழுகிறது.

பாஜகவை பொறுத்தவரை 7 பேருமே குற்றவாளிகள்தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. சிறையில் இருந்து வெளிவந்திருப்பவர் கொண்டாட படக்கூடியவர் அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. அக்கட்சிக்கு ஆளுமை இருக்குமானால் அது திமுக கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும்.

முன்னாள் பிரதமரை கொன்றவர்களை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பது தவறு. உச்சீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மீதமுள்ள 6 பேருக்கும் நேரடியாக பொருந்தாது.

நெல்லையில் 3 பேர் உயிரிழந்த கல் குவாரி காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த குவாரி திறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் .மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள், என்று கூறினார்.

Views: - 606

0

0