வேட்டி, சட்டையில் மனதார ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி ; கோவில் யானை ஆண்டாளிடமும் ஆசி பெற்று நெகிழ்ச்சி..!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 1:11 pm
Quick Share

பாரம்பரிய உடை அணிந்து திருச்சி ரெங்கநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்து மகிழ்ந்தார்.

நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணியளவில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு சென்றார்.

பின்னர், கார் மூலமாக கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடியை வழிநெடுகிலும் இருமருங்கிலும் திரண்டிருந்த பாஜகவினர் மலர் தூவியும், தேசிய பக்தி முழக்கத்தையும் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பாரம்பரிய உடையுடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். ராமானுஜர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதியிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். காயத்ரி மண்டபத்தில் நின்று ரெங்கநாதரை தரிசித்தார். தொடர்ந்து, ரெங்கநாதர் கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்களை கொடுத்து மகிழ்ந்ததுடன் ஆசியும் பெற்றார். பின்னர், யானை ஆண்டாள் மவும் ஆர்கன் வாசிப்பதை பார்த்து மகிழ்ந்தார்.

இதையடுத்து, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கம்பர் அமர்ந்து கம்பராமாயணத்தை இயற்றிய மண்டபத்தில் இருந்து கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.

வழிபாடுகளை முடித்த பிரதமர் மோடி ரெங்கநாதர் கோவிலில் இருந்து வெளியே வந்த பிறகு, அங்கிருந்தவர்களுக்கு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்தார். பின்னர், ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டு சென்றார்.

Views: - 284

0

0