மக்களின் நலன் கருதி மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துக : தமிழக அரசுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 10:15 am
Quick Share

நாட்டின் நலன், பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். போலீசார் மரியாதையை ஏற்று கொண்ட அவர் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :- தென் பகுதிக்கு வருவது மிக விருப்பமான ஒரு விஷயம், அதுவும் தூத்துக்குடிக்கு வருவது ரொம்ப விருப்பமான ஒரு விஷயம், தூத்துக்குடியில் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று நிதின் கட்கரி-யிடம் பல நேரங்களில் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

அதன் பேரில், தூத்துக்குடி வஉ சிதம்பரனார் துறைமுகம் சாலையில் 200 கோடி ரூபாய் மதிப்பில் 6 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இத்திட்டம் தூத்துக்குடிக்கு பொருளாதாரத்தில் மிக பிரம்மாண்டமான ஒரு முன்னேற்றத்தை கொண்டு வரும். இதை போல இன்னும் பல முன்னேற்றங்கள் வர இருக்கிறது.

பாரத பிரதமர் அடிப்படை கட்டமைப்பை இந்த பாரத தேசத்தில் உருவாக்க வேண்டும், வருங்கால சந்ததியினர் மிகவும் வசதியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்னதனால் ஒவ்வொரு இடங்களில் கதிசக்தி என்ற திட்டம் வைத்திருக்கிறார். அதில், ஐந்து, ஆறு துறையைச் சார்ந்தவர்கள் சாலை மேம்பாட்டு துறைமுகத்துறை சேர்ந்து நாட்டுக்கு மிக பிரம்மாண்டமான ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதனால் தான் புதுச்சேரியும் பல முன்னேற்றத்தை பெறுகிறது.

இப்போது காரைக்கால் டூ இலங்கை கப்பல் போக்குவரத்து வர இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூர், சென்னைக்கு சிறுரக 20 பேர் இருக்கின்ற விமான போக்குவரத்து வர இருக்கிறது. ஆக எல்லாவிதத்திலும் வளர்ச்சி திட்டங்களை பாரத பிரதமர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அதில், தூத்துக்குடி துறைமுகமுகதிற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரியில், 1000 ரூபாய் குடும்ப பெண்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம். தமிழகத்தில் தற்போது தான் செப்டம்பர் மாதம் தான் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மத்திய அரசு 200 ரூபாய் மானியம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குடும்பப் பெண்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும். பெண்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்காக, சமைப்பதற்கு இந்த கேஸ் மானியம் மத்திய அரசு கொடுக்கிறது.

ஐம்பதாயிரம் ரூபாய் பிறந்த பெண் குழந்தைகளுக்கு காப்பீடு செய்வதற்கான ஒரு திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன திட்டம் அறிவித்தாலும், துணைநிலை ஆளுநர் என்ற வகையில் அவருக்கு உறுதுணையாக இருந்து நான் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். புதிய கல்வி கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை தமிழகம் போன்ற மாநிலங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் அதோட முழுமையான நல்லவற்றை ஆராய்ந்து அதை அந்தந்த மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறினார்.

Views: - 214

0

0