கோவில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா : பிரபல கோவிலை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை..!
29 September 2020, 11:56 amகோவில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போதைக்கு பிரபல பூரி ஜெகநாதர் கோவிலை திறக்க முடியாது என அதன் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாத் ஆலயத்தை திறக்க கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, கோவிலில் பணியாற்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் கோயிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
மொத்தம் கோவில் ஊழியர்களிடம் பெறப்பட்ட 822 பரிசோதனை மாதிரிகளில் 379 ஊழியர்கள் உள்பட 400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த ஊழியர்களுடன் சேர்த்து, அவர்களின் குடும்பத்தினர் என 2,200 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நவம்பர் இறுதி வரை கோவிலுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.