இது முடிவல்ல.. இனிதான் ஆட்டம் ஆரம்பம் ; திடீரென ஆளுநரை சந்தித்த கிருஷ்ணசாமி… திமுகவுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 4:10 pm
Quick Share

சென்னை ; சென்னையில் போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திடீரென ஆளுநரை சந்தித்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், சட்டவிரோத பார்களை அறவே ஒழித்திடவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியானது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது.

இந்த பேரணியில் புதிய தமிழகம் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி தலைமையிலான அமமுகவினரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், எந்த காரணத்தை கொண்டும் பார்களில் மது விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது. மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் கிராமங்கள், நகரங்களில் மது விற்பனைக்கு அனுமதிக்க கூடிய நிலைமையை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் முதற்கட்டமாக , எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் பங்குபெற வேண்டும் என்ற அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்ட அமமுகவினரும், பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே கட்சியினரும் ஆதரவு தந்து பங்கேற்றுள்ளனர். இதற்கு பிறகாவது, மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கருதுகிறேன்.

2021 ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் எல்லா இடங்களிலும் கருப்பு சட்டை அணிந்து மதுவிலக்குக்காக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதை பரவலாக்க கூடிய வகையில் பணியாற்றுகிறார்களே தவிர, அதை அமல்படுத்த எவ்விதமான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இந்த போராட்டம் துவக்கமே தவிர முடிவல்ல. இனி அடுத்த போராட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும் என்பதையும், இந்த பேரணியின் நிறைவாக ஆளுநரை சந்தித்து 250 பக்கங்கள் கொண்ட மனுவை அளிக்க இருக்கிறோம். அந்த மனுவின் விபரங்களையும் நாம் வெளியிடுவோம், என்று கூறினார்.

Views: - 317

1

0