சாதி சான்றிதழ் விவகாரம்.. இதுவரை 2 பேர் தற்கொலை ; இதோடு போதும்.. தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்

Author: Babu Lakshmanan
12 October 2022, 8:28 pm
Quick Share

சென்னை : சென்னையில் சாதி சான்றிதழ் வழங்காத விரக்தியில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலமுறை விண்ணப்பித்தும் சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடந்த 100 நாட்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காததால் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை இதுவாகும். இதற்கு முன் கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொண்டாரெட்டி சாதி சான்றிதழ் கிடைக்காததால் பெரியசாமி என்ற முதியவர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12,23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும். பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 399

0

0