சனாதன விவகாரம்… பயத்தில் பம்முகிறார் அமைச்சர் உதயநிதி ; தப்பு தப்பு தான்… பாஜக கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 8:25 pm
Quick Share

சனாதன விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பில் தெரிவித்த கருத்துக்கு பாஜக விமர்சனம் செய்துள்ளது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, “சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை . சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது”, என தெரிவிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் தரப்பினரின் இந்தக் கருத்துக்கு பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதம் என்று உணர்ந்ததால் தான் அமைச்சராக பேசவில்லை, தனிப்பட்ட முறையில் பேசினேன் என்று பதவி போய் விடுமோ என்ற பயத்தில் பம்முகிறீர்கள். பின் வாங்குகிறீர்கள். பாஜகவின் கண்ணுக்கு மட்டுமல்ல, காதுகளுக்கும், சிந்தனைக்கும் தெரிந்தே இந்த வழக்கு உள்ளது. கண்களை மூடிக் கொண்டு, காதுகளை அடைத்துக்கொண்டு, சிந்தனையை இழந்து சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று நீங்கள் பேசியது குற்றம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 262

0

0