தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..!
25 August 2020, 1:43 pmசென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமலேயே, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களின் நிலைப்பாடு குறித்து பின்பு அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்தது.
இதனிடையே, தனித்தேர்வர்கள் தங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவதை உறுதி படுத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த பதிலை தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.