வேங்கை வயல் விவகாரம்… தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது ஒரு பெண்ணா..? வெளியான பகீர் தகவல்..!

Author: Babu Lakshmanan
21 April 2023, 10:13 am
Quick Share

புதுக்கோட்டை ; வேங்கைவயலில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் வெளியான தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திது.

இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறிய வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 3 மாதங்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 147 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 5 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாததால், சென்னை உயர்நீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை விசாரித்து வருகிறது.

இதனிடையே, மனிதக் கழிவு கலக்கப்பட்ட தண்ணீரை சோதனை செய்ய பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. தற்போது அந்த நீரின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், டிஎன்ஏ சோதனை முடிவு வெளியாகும் போது குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 408

0

0