நளினி உள்பட 6 பேரும் விடுதலை… முடிவுக்கு வருகிறது 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை ; உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 2:26 pm
Quick Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மேல்முறையீடு செய்ததில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது.

கடந்த 2000ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேபோல, 2014ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இதனிடையே, தன்னை இந்த வழக்கில் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அதேவேளையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், இந்த முடிவை மத்திய அரசு கடுமையாக எதிர்த்தது.

மேலும், 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததற்கு உச்சநீதிமன்றத் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் முடிவு எடுக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

Supreme court - Updatenews360

பின்னர், உச்சநீதிமன்றம் தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளனின் விடுதலை ஒப்பிட்டு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் வாதிடப்பட்டது.

ஆனால், நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தினர். இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி உள்ளிட்ட எஞ்சிய 6 தமிழரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நளினி அவரது கணவர் முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 411

0

0