மாவட்ட பேருந்து மற்றும் ரயில்நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மாற்றுத்திறனாளிகள்: மற்றொருபுறம் கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Author: Babu Lakshmanan
22 March 2022, 12:46 pm
Quick Share

பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை போராட்டம் அறிவித்த மாற்றுத்திறனாளிகள் அந்தந்த மாவட்ட பேருந்து மற்றும் ரயில்களில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பாதுகாப்பு சமூகப் பாதுகாப்பு உதவித் தொகை, புதுச்சேரி (ரூ.3,800), தெலுங்கானா ( ரூ.3,016), ஆந்திரா (ரூ.3,000) ஆகிய அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று, தமிழகத்திலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இன்னமும் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது, 3.50 லட்சம் பயனாளிகள் இருந்து வரும் நிலையில், வெறும் 2 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள், திமுக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் 10,000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போராட்டத்தை முடக்கும் விதமாக, தமிழகம் முழுவதும், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்தந்த ஊர்களிலே அவர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போலீசாரின் தடுப்பையும் மீறி சென்னை தலைமைச் செயலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளி மக்கள், உதவித் தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 837

0

0