ஜவுளித் தொழில் நிறுவனங்கள் போராட்டம்… மின் கட்டண உயர்வே காரணம் : திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கூறிய ஐடியா!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 8:14 pm
vanathi - Updatenews360
Quick Share

ஜவுளி தொழில் நிறுவனங்கள் போராட்டம்… மின் கட்டண உயர்வே காரணம் : திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கூறிய ஐடியா!!

நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும், வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கட்டண உயர்வால் கொங்கு மண்டல பகுதியிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிப்பு ஏற்கனவே நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளி தொழில் நிறுவனங்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மின் கட்டணம் உயர்த்தப்பட்டு ஓராண்டு முடியும் முன்பே தொழில் துறையினருக்கான மின் கட்டணத்தை திமுக அரசு யூனிட்டுக்கு 15 முதல் 25 காசுகள் வரை உயர்த்தியுள்ளது.

இதனால், தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதியில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறிப்பக ஜவுளி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மின் கட்டண உயர்வு பெரும் சுமையாகி விட்டது. அதுவும் சிறிய தொழில் நடத்துபவர்கள் அடுத்தகட்டத்துக்கு நகர முடியாதது மட்டுமல்ல, இருப்பதையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவேதான், மின் கட்டண உயர்வு, நூல் உயர்வைக் கண்டித்து நவம்பர் 5-ம் தேதி (இன்று) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை அனைத்து ஜவுளி தொழில்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனவே, ஜவுளித் தொழில் உற்பத்தி நிறுத்தம் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பாதுக்கும்.

தமிழ்நாடின் நிதி நிலைமை மேலும் மோசமாகும். எனவே, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு குறைக்க வேண்டும். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் தலையிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்து, ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 222

0

0