ஊட்டியை உறைய வைக்கும் கடுங்குளிர்: வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக பதிவு..!!
Author: Aarthi Sivakumar24 December 2021, 8:57 am
நீலகிரி: அவலாஞ்சியில் மைனஸ் 2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதால் கடுங்குளிரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊட்டி அருகே அவலாஞ்சி, அப்பர்பவானி, போர்த்திமந்து உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் கீழ் பதிவாகி வருகிறது. குறிப்பாக அவலாஞ்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பநிலை பூஜ்யம் டிகிரியாக பதிவாகி இருந்தது.
தொடர்ந்து அங்கு உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 2 டிகிரியாக வெப்பநிலை இருந்தது. அதிகபட்சமாக 16 டிகிரி பதிவானது. இதன் காரணமாக அணையின் அருகே உள்ள புல்வெளிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
இந்தப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை. வனப்பகுதியை ஒட்டி அணையில் இருந்து மின்உற்பத்திக்காக மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு மின்ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். அங்கு மைனஸ் 2 டிகிரி நிலவுவதால் கடும் குளிர் இருந்தாலும் அந்த குளிருக்கு மத்தியில் மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அணையின் அருகே வெப்பநிலையை கணக்கிட கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கருவியில் மைனஸ் 2 டிகிரி பதிவாகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடுங்குளிரால் பொமக்கள் அவதிப் படுகின்றனர்.
0
0