கழுத்தை அறுத்து, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு கைதிகள் தற்கொலை முயற்சி : சிறப்பு முகாமில் ஆட்சியர் நேரில் விசாரணை..!
Author: Babu Lakshmanan18 August 2021, 6:19 pm
திருச்சி : திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா,சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 30 பேர் என 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, வழக்குகளில் விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகக் கூறி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். மேலும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளதாகவும், கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும், குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து தொடர்ந்து பல்வேறு கட்ட உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், டிக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அங்கிருந்த காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு காவல் துறையினர் முதல் உதவி சிகிச்சை அளித்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சிறப்பு முகாமில் நேரில் விசாரணை நடத்தினர்.
0
0