மதுரையில் முக்கிய புள்ளியை தூக்கிய இபிஎஸ்… அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி திமுக சேர்மன்… அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம்!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 2:56 pm
Quick Share

மதுரை ; உசிலம்பட்டி திமுக நகர்மன்ற தலைவர் சகுந்தலா, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி திமுக சேர்மன் சகுந்தலா தலைமையில், சகுந்தலாவின் மகனான, திமுக மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய் மற்றும் முன்னாள் திமுக செயற்குழு உறுப்பினர் சோலைரவி உள்ளிட்டோர் தி.மு.கவில் இருந்து விலகி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடியாருக்கு பூங்கொத்து கொடுத்தும், வெற்றிலை மாலை அணிவித்தனர்.  அதனை பெற்றுக் கொண்ட எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வரவேற்றார்.

கடந்த மாதம் உசிலம்பட்டி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அமமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணையும் நிகழ்வு உசிலம்பட்டியில் பேசுபொருளாகி உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் வேட்பாளராக செல்வி என்பவரை திமுக தலைமை அறிவித்தது. ஆனால், திமுக நகர செயலாளர் தங்கமலை பாண்டியின் மனைவிக்கு தலைவர் பதவி வழங்கப்படாததால், அவரது ஆதரவாளரான சகுந்தலாவை போட்டியிடச் செய்தார். பின்னர், அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் அவரை வெற்றியும் பெற வைத்தார்.

இதையடுத்து, உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கபாண்டியை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. இந்த நிலையில், தான் சகுந்தலா தற்போது திமுகவில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உசிலம்பட்டியில் திமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 318

0

0