திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை…. விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்…!!

Author: Babu Lakshmanan
25 July 2022, 2:34 pm
Quick Share

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் சட்டப்போராட்டம் நடத்திய நிலையில், 10 நாட்களுக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவு அச்சத்தால் திருவள்ளூரில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை திருவள்ளூர் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும், 12ம் வகுப்பு படித்த திருத்தணி தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகள், தங்கி இருந்த தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி அருகேயுள்ள சூர்யா கல்வி குழுமத்தில் பாராமெடிக்கல் துறையில் பயின்று வந்த ரம்யா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கல்லூரியில் முதல் ஆண்டு பாராமெடிக்கல் துறையில் பயின்று வரும் மாணவி ரம்யா, வழக்கம்போல கல்லூரிக்கு வருகை தந்த மாணவி, திடீரென கல்லூரியின் முதல் தலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கீழே விழுந்த மாணவி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடவே, அவரை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக அரசு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் நேரில் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை செய்வதும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 454

0

0