மது வாங்கித் தராத ஆத்திரத்தில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் அடி உதை:2 பேர் கைது..
Author: kavin kumar13 October 2021, 6:54 pm
சென்னை: எருக்கஞ்சேரியில் மது வாங்கித் தராத ஆத்திரத்தில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி கரிமேடு 4 வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். வேலையை முடித்து விட்டு வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்த போது அவரை வழிமறித்த 3 நபர்கள் தங்களுக்கு மது வாங்கி தரும்படி கூறி உள்ளனர். அதற்கு பார்த்திபன் என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து பார்த்திபனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பார்த்திபனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்திபனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வின்சென்ட் என்ற நபரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0
0