ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்
15 September 2020, 9:55 pmதிருவள்ளூர்: எளாவூர் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி அதிலிருந்த இருவரையும் சோதனை செய்ததில், பையில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாத்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ், செங்குன்றம் ஷக்கில் என காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரும் ஆந்திராவில் உள்ள நாயுடு பேட்டையில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை வாங்கி விற்பனைக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.