7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தேயிலை தோட்ட தொழிலாளி கைது
Author: kavin kumar27 August 2021, 5:57 pm
நீலகிரி: உதகையில் பேத்தியுடன் விளையாடிய 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தேயிலை தோட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள மஞ்சக்கொம்பை பஜார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(50). தேயிலை தோட்ட தொழிலாளி. இவருக்கு 7 வயதில் பேத்தி உள்ளார். இவருடன் அருகில் வசிக்கும் சிறுமிகள் விளையாட வரும்போது அவர்களிடம் பிரகாஷ் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்துவீட்டை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், பிரகாஷின் பேத்தியுடன் விளையாட சென்றுள்ளார்.அப்போது, சிறுமிக்கு பிரகாஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பிச்சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.
இதனை அடுத்து, அவரது பெற்றோர்கள் நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரபுவிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகர் ரம்யா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதில், பிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, ரம்யா குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் போலீசார் தோட்ட தொழிலாளி பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பேத்தியுடன் விளையாட வரும் சிறுமிகளுக்கு, முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மஞ்சக்கொம்பை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0
0