இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரிடம் வழிப்பறி: வழிப்பறியில் ஈடுப்பட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
29 September 2020, 6:21 pmவேலூர்: ஆம்பூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரிடம் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர் பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அடுத்த பெரியதாமல் செருவு பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். இவரும் இவரது மனைவி பிருந்தாவும் இன்று வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கிற்கு சென்று பின் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய நிலையில், இருவரும் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் அருகே வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடிபோதையில் இருந்த மூவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை வழிமறித்து பின்னர் பிருந்தாவின் கழுத்தில் இருந்த 1 1/2 சவரன் தாலி சங்கிலியை பறித்து தப்பியோடியுள்ளனர்.
பின்னர் இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தப்பியோடியவர்களை பிடிக்க முயன்றனர் அப்போது மூவரில் ஒருவரை மட்டும் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். அதில் அவர் மின்னூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். பட்டபகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்தேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.