மருத்துவ உபகரணங்களை வழங்கிய அமைச்சர் கே.பி.அன்பழகன்
29 November 2020, 8:17 pmதருமபுரி: தருமபுரியில், அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 21 மாணவ மாணவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
அரசு உள் ஒதுக்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 21 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்கள், சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கி பாராட்டிப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் அரசு உன் ஒதுக்கீட்டின் படி 21 மாணவமணிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளது மிகவும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவ, மாணவிகளுக்கு சரஸ்வதிபச்சியப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் முதலாமாண்டில் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் வருகிற கல்வி ஆண்டில் ரூ. 20 ஆயிரம் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படும். கடந்தாண்டு அரசு பள்ளிகளில் படித்த 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேந்தனார். ஆனால் இந்த ஆண்டு முதலமைச்சர் கொண்டுவந்த உள்ஒதுக்கீடு சட்டத்தினால் 313 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல் மருத்துவ கல்லூரிகளில் 97 பேர் சேர்ந்துள்ளனர். மொத்தம் 410 பேர் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 164 மாணவ, மாணவிகள் நீட் பயிற்சி பெற்றனர். இதில் 54 பேர் தேர்ச்சி பெற்றனர்.43 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 11 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதில் 21 பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே அதிகமான மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாவட்டம் தர்மபுரி மாவட்டம் என்பது பெருமைக்குரிய நிகழ்வாகும். மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ள மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவியாக இருந்து அவர்கள் நல்ல முறையில் படிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். கல்லூரிப் பருவத்தில் மாணவ-மாணவிகள் கவனத்தை திசை திருப்பாமல் நல்ல முறையில் படித்து அரசுக்கும், பெற்றோர்களுக்கும் நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என பேசினார்.
0
0