நிலத்தை மீட்டுத்தர கோரி விவசாயி குடும்பத்துடன் தர்ணா : தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…

Author: kavin kumar
26 February 2022, 7:36 pm
Quick Share

தருமபுரி : தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது விவசாய நிலத்தை மீட்டுதரகோரி பாதிக்கபட்ட விவசாயி தனது குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே திப்பம்பட்டி கிராமத்தில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தை அவரது மகன் வேடியப்பன் என்பவருக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தனது 3 ஏக்கர் விவசாய நிலத்தை மகன் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார். இவர்கள் கூலி வேலை செய்து குடும்பத்துடன் அதே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டியவரி பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பருவத்திற்கு ஏற்றால் போல் காலப்பயிர் வகைகளையும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேடியப்பனுக்கு தெரியாமல் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் நில மோசடி செயலில் ஈடுப்பட்டு தனக்கு சொந்தமான இடத்தினை தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நாகமரத்துப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் வேலாயுதம் என எனது தந்தை பெயரில் வேறுவொரு நபரை மோசடியான முறையில் கடந்த 2020 ஆண்டு போலியான நபர்களை சாட்சிகளாக வைத்தும், வாக்காளர் அடையாள அட்டை வைத்தும் ஆவணம் செய்துள்ளார். தற்போது அந்த ஆவணத்தை கொண்டு ஜெகநாதன் என்பவர் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார்.

இதுகுறித்து அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது குடும்பத்துடன் வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் வேடியப்பன் மற்றும் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து விசாரணை மேற்கொள்ளபட்டு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 653

0

0