17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் கைது
27 August 2020, 11:00 pmகிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
காவேரிப்பட்டினம் அருகே உள்ள கருக்கன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் உதயணன் (55). இவர், அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து, பணம் கையாடல் செய்ததாக பணிநீக்கம் செய்யப்பட்டவர். இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை, கடந்த ஓராண்டாக மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் விசாரித்ததில், உதயணன் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஊர் மக்கள் உதயண்ணனை பிடித்து காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதயண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.