தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்
16 September 2020, 8:04 pmபுதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு அலட்சியம் செய்வதாக குற்றம்சாட்டி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் அரசு அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் போராட்டம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை டவரில் இருந்து இறக்கினர். மேலும் மாநில அரசு இதற்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரித படுத்தாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டினால் பல கட்ட போராடங்களில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.