கடன் வாங்கி தர மறுத்த மனைவியை சிலிண்டரால் அடித்துக் கொலை: கணவரை கைது செய்து விசாரணை…
Author: kavin kumar8 October 2021, 6:54 pm
திருச்சி: திருச்சியில் கடன் வாங்கி தர மறுத்த மனைவியை சிலிண்டரால் அடித்துக் கொலை செய்த கணவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த கோபால் மனைவி அனிதாவிடம் 20 ஆயிரம் பணம் கடன் வாங்கி தர சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. கோபம் அடைந்த அனிதா தினமும் குடித்து விட்டு வருவதை கண்டித்தார். மேலும் கடன் வாங்கி கொடுக்க மறுத்தார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாய்த்தகராறு முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் போதையில் இருந்த கோபால் சமையல் அறையில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரை எடுத்து அனிதாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அனிதா கூச்சலிடவே இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்து ரத்தம் சொட்ட நிலையில் மயங்கிக் கிடந்த அனிதாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து கணவர் கோபாலை எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0